தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திருப்பூர் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளரின் சங்கத் தலைவராக இருந்து வருபவர் திருப்பூரைச் சேர்ந்த சக்தி சுப்பிரமணியம். இது மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். திரையரங்குகளில் குறித்து எழும் புகார்களுக்கும், படம் திரையிடல், அதிகாலை சிறப்பு காட்சிகள் குறித்தும் எழும் புகார்களுக்கு அடிக்கடி செய்தி மற்றும் தொலைக்காட்சி மூலமாகவும் தனியார் youtube தொலைக்காட்சிகள் மூலமாகவும் பேட்டியளித்து விளக்கம் அளித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான லியோ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், “அதிகாலைக் காட்சியினால் பல திரையரங்குகளில் ரசிகர்கள் சேதங்களை ஏற்படுத்துவதால் சிறப்பு காட்சிகளை வெளியிடுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று கூறி அதிர வைத்திருந்தார். படம் வெளியான பின்னர் “லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது, தெரிந்துதான் இந்த படத்தை திரையிட்டோம், ஏனென்றால் தீபாவளி வரை வேறு எந்த புதிய படங்களும் இல்லை” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் சிறப்பு காட்சிக்கு அனுமதி தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காத நிலையில், திருப்பூரில் உள்ள சுப்பிரமணியனின் சொந்த நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக படம் திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் கொடுக்கும் விளக்கத்தை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியம். இது குறித்து அவர் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இப்பவும் எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன், இதுகாறும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் பதவி விலகளுக்கு சொந்த வேலைகள் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று இணையத்தில் கேள்வி எழுந்துள்ளது.