கேப்டன் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரபட்ட நிலையில், மன உளைச்சல் தாங்காமல் திரைப்பிரபலம் ஒருவர் காலமாகி இருக்கும் செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் உலகிலும் எதிரிகளையே சம்பாதித்துக் கொள்ளாதவர் கேப்டன் விஜயகாந்த். வாரி வழங்கும் கர்ணனாக இருந்த இவருக்கு தேர்தலில் தொடர்ந்து தோல்வியை கிடைத்து வந்தது. தோல்விகளால் துவண்ட கேப்டனுக்கு உடல் நிலையும் சரியாக கை கொடுக்கவில்லை. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் வீட்டிலேயே முடங்கினார். பொது நிகழ்ச்சிகள் மற்றும் சுதந்திர தின விழா போன்றவற்றில் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வந்து தொண்டர்களிடம் கைகாட்டி சென்று வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கேப்டனுக்கு உடல்நலம் குன்றிப் போனது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கை வெளியானது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விஜயகாந்திற்கு தொண்டையில் குழாய் போட்டு உணவளிக்கப்படுவதாகவும், அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தவறான செய்திகள் பரப்பப்பட்டது. இதனால் கேப்டனின் ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால் கேப்டனின் தீவிர ரசிகரும் தொண்டருமாக இருந்த வேலுமணி என்பவர் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறைக்குள் நுழைந்து கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக பணியாற்றினார். 55 வயதான இவர் பல திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார். வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகம்’ புத்தகம் உருவாவதற்கு பக்கபலமாக இருந்தவர். இயக்குனர் வசந்த் இயக்கிய ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘ரிதம்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். விஜயகாந்த் நடித்த ‘தேவன்’ படத்தில் இவர் எழுதிய வசனங்கள் விஜயகாந்தை மிகவும் கவரவே, தொடர்ந்து ‘எங்கள் ஆசான்’, ‘விருதகிரி’ போன்ற படங்களில் வேலுமணிக்கு வசனம் எழுத விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தார். இதன் மூலமாக தொடர்ந்து இருவருக்குள்ளும் நல்ல நட்பு நீடித்து வந்தது.
தொடர்ந்து விஜயகாந்த் அரசியல் மேடைகளில் பேசவும் வேலுமணி உதவி புரிந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலிவடைந்தது என்கிற செய்தியை கேட்டு மிகவும் மன வருத்தத்தில் இருந்ததுள்ளார் வேலுமணி. சரியாக சாப்பிடாமல் மனக்குழப்பத்தில் இருந்த அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். திருமணமே செய்து கொள்ளாமல் திரை துறைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரின் இறுதி சடங்குகள் கடலூரில் அவரது சொந்த ஊரில் நடைபெற இருக்கிறது. இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..!