விருமன் படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணால என்ற பாடலை நீக்க வேண்டும் என்று ஒரு அமைப்பு கோரிக்கை எழுப்பியுள்ளது. இன்று கஞ்சா பூ என்று பாடுவீர்கள் நாளை அபின் கொக்கைன் என்று பாடுவீர்களா என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது விருமன் திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தி மற்றும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கரின் மகள் அதிதிக்கு இது முதல் படமாகும். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தை கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே கஞ்சா பூவு கண்ணால என்ற பாடல் வெளியாகி இருந்தது.

இந்தப் பாடலில் நடிகை அதிதி தாவணி சேலையில் தோன்றி மிக அழகாக நடனமாடி இருப்பார். அவரது நடனத்தை பார்த்த பலரும் தாவணி சேலை உடுத்தி அவரைப் போலவே நடனமாடி instagram பக்கத்தில் ரீல்ஸ் செய்து பதிவேற்றி இருந்தனர். பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்தப் பாடலை, தற்போது படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருபவர் ராஜேஸ்வரி பிரியா. இவர் தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து பதிவிட்டும் பேசியும் வருகிறார். இந்த நிலையில் விருமன் படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணால பாடலை நீக்க வேண்டும் என்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பெண்ணின் கண்களை அழகு என்று வர்ணிக்க ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது கஞ்சாப் பூ கண்ணாலே என்றுதான் பாடல் எழுத வேண்டுமா???? கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது. அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும். கஞ்சாப் பூ எனப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான்.

ஏற்கனவே “கஞ்சா வெச்ச கண்” எனப் பாடல் வெளியாகி உள்ளது.அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது .இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன்,அபின்,…இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும். எதை ஒழிக்க வேண்டுமோ அதன் பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல. திரைப்படத் துறையினர் மக்கள் நலன் குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும். அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும்.நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கலைத்துறையை நேசிப்பவள் நான் ஆனால் சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம் என்று ராஜேஸ்வரி பிரியா தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
