
கோலிவுட்டில் நட்சத்திர நாயகனின் ஒரு பெரிய படம் வெளியாகிறது என்றாலே அதற்கு கண்டிப்பாக எதிரான பல பிரச்னைகள் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. முக்கியமாகப் படத்தின் கதை தன்னுடையது என்று சிறிய இயக்குநர்கள் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்வார்கள்.
அந்த வகையில் விஜய் மற்றும் அட்லீ ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் கதை என்னுடையது என்று கே.பி.செல்வா என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளாராம். ஆனால் இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் கூறியதால், கே.பி.செல்வா தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அந்த வழக்கு நேற்று நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை இன்று ஒத்தி வைத்துள்ளது.
பிகில் படத்தில் விஜயுடன் சேர்ந்து டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், விவேக், யோகி பாபு, தேவதர்ஷினி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை விஜய் ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு இந்த படத்தை அட்லி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பிகில் படத்தில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார்.மிக பெரிய பொருட் செலவில் உருவாகி உள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.