
நடிகரும் அரசியல்வாதியுமாக வலம் வரும் கமலஹாசன் முதன்முதலாக களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானார். இந்த 2019 ஆம் ஆண்டோடு கமலின் கலைத்துறை வாழ்க்கை 60 ஆம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறது.
இதனை முன்னிட்டு கமலுக்கு சிவாஜி கணேசன் இல்லமான அன்னை இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டது. தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேஎசன் இல்லமான அன்னை இல்லத்துக்கு வந்த கமலஹாசனை ஆரத்தி எடுத்து வரவேற்ற சிவாஜி கணேசன் குடும்பத்தினர், அவருக்கு நினைவுப்பரிசு ஒன்று வழங்கி மகிழ்ந்தனர்.
அன்னை இல்லத்தில் அறுசுவை உணவோடு அன்பும் சேர்த்து வழங்கப்பட்டது.சிவாஜி கணேசன் குடும்பத்தினர் தரப்பில் நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் வழங்கிய நினைவுப்பரிசில் “அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் சிவாஜி. அவா் வெள்ளித்திரை விஞ்ஞானி. அவரின் தலைமகன் நீ கலைஞானி. நடிகா் திலக நாயகன் பாராட்டிய உலக நாயகனே. நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு. நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு, வாழ்ந்திடுக நூறாண்டு” என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து கமல் ட்விட்டரில் தெரிவித்ததாவது,“அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது.”
என்று தெரிவித்தார்.