
தற்போது எழுந்துள்ள பொருளாதார மந்தநிலையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், அதற்காக ஐந்து தீர்வு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த பொருளாதரா வல்லுநருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சீர் செய்ய அரசிடம் தெளிவான பார்வை இல்லாததே கவலைக்குறியது. இதனை சரிசெய்ய தற்போது ஐந்து சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்தலாம். ஆனால் அதற்கு முன், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளமுடியாமல் திணறுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அரசுக்கு இருக்க வேண்டும். அதன் பிறகு பொருளாதார நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவரிடமும் அரசு உரையாட வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையை பார்க்கும் போது பிரச்சனையினை சரி செய்வதில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே அதிக நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. தலைப்பு செய்தியால் மட்டுமே பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது. இந்த மனப்பான்மையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது முதல், துறைசார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, முழு பொருளாதார கட்டமைப்பையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
5 சீர்திருத்த நடவடிக்கைள்:
1 ஜிஎஸ்டியை அனைவருக்கும் ஏற்றது போல் மாற்றியமைக்க வேண்டும். இது குறுகிய காலத்திற்கு வருவாய் இழப்பைக் குறிக்கும் என்றாலும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
2 விவசாய துறையை புதுப்பித்து, கிராமப்புறத்தின் நுகர்வு தன்மையை பலப்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த சந்தைகளை சுதந்திரமாக விடுவிப்பதன் மூலம் பொருளாதாரம் மக்கள் கைகளுக்கு எட்டக்கூடும்.
3 தற்போது பணப்புழக்கம் சரிந்திருக்கிறது. ஆகவே அதனை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் மூலதன உருவாக்கமானது பலப்படும்.
4 ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கிய துறைகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை எளிமைப்படுத்தி தர வேண்டும்.
5 அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தக வரி சார்ந்த யுத்தத்தின் காரணமாக, வளர்ந்து வரும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்த நாம் தவற விடக்கூடாது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரின் காரணமாக வெளிவரும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
இத்னை நடைமுறை படுத்துவதன் மூலம், 3-4 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை நம்மால் திரும்பப் பெற முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.