
மாநிலமாக கூறப்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறியது. இதனால் இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளது.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை (ஆர்டிகள் 370) இந்திய அரசு நீக்கியது. அதனைத் தொடர்ந்து அதை லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்க அறிவித்திருந்தனர். அதனைச் செயல்படுத்தும் வகையில் 560 சுதேச மாநிலங்களை இந்தியாவுடன் இணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளான இன்று (அக்டோபர் 31) ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜம்மு & காஷ்மீர் புதுச்சேரி போன்று சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும். இது காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், அதே நேரத்தில் நிலம் குறித்த முடிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகார வரம்பாக இருக்கும். இதன் லெப்டினன்ட் கவர்னராக மத்திய செலவுச் செயலாளர் கிரிஷ் சந்திர முர்மு இன்று காலை பதவி ஏற்றார்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றம் இல்லை. லடாக், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். அதை லெப்டினன்ட் கவர்னர் மூலம் நிர்வகிக்கப்படும். இதன் லெப்டினன்ட் கவர்னராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ராதா கிருஷ்ணா மாத்தூர் இன்று காலை பதவியேற்றார்.