பாபர் மசூதியை இடிப்பது போல மாணவர்களை இயக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்பட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பன்ட்வால் தாலுகாவில் கல்லட்காவில் உள்ள ஸ்ரீ ராம வித்யகேந்திர உயர்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கலந்து கொண்டார். இந்த பள்ளியானது கர்நாடகாவின் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், அமைப்பின் தென்-மத்திய பிராந்திய செயற்குழு உறுப்பினருமான கல்லட்கா பிரபாகர் பட் என்பவருக்கு சொந்தமானது.

இந்நிகழ்வில், பாபர் மசூதியின் படம் பொறிக்கப்பட்ட பெரிய அளவிலான பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனை அப்பள்ளி மாணவர்கள் இடிப்பது போன்று, கிழித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் மாணவர்களிடையே வெறுப்பை விதைக்கும் இப்பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்ய கோரிக்கை எழுந்தது.
சர்ச்சை பெரிதாகவே, அப்பள்ளி உரிமையாளர் கல்லட்கா பிரபாகர் பட் மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் நால்வர் உள்பட 5 பேர் மீது சட்டப்பிரிவு 295A மற்றும் 298 ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தக்ஷினா கன்னட காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி பிரசாத் தெரிவித்துள்ளார்.