நடிகை அசின் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில் தற்போது அசினே அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவருடனான விவகாரத்து குறித்து முக்கிய அறிவிப்பை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முண்ணனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். 2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா” என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் அசின். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை.
பின்னர் 2003-ம் ஆண்டு வெளிவந்த “அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் தெலுங்கு படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை வென்றார். பின்னர் தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலமாக அவர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது.
அதன் பின்னர் வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம் ஆகிய பல படங்களில் நடித்த அவர், குறுகிய காலத்திலேயே பல முண்ணனி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக் மூலமாக இந்தி துறையில் பயணிக்கத் தொடங்கினார். பின்னர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த ராகுல் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஆரின் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத அசின் அப்போது மகளின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் மகளின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத அசின் குறித்து திடீரென நேற்று ஒரு தகவல் பரவத் தொடங்கியது. அசின் அவரது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது.
இந்த நிலையில் அசின் அது குறித்து விளக்கம் ஒன்றை அளித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில்,” கோடை விடுமுறைக்கு நடுவில் காலை உணவை நாங்கள் இருவரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எந்தவித ஆதாரமும் இல்லாமல் கற்பனையான செய்தி வந்தது. நாங்கள் வீட்டில் நன்றாக உங்கள் குடும்பத்துடன் அமர்ந்து திருமணம் குறித்து திட்டமிட்டு இருக்கும் போது நாங்கள் பிரிந்து விட்டதாக சொல்வதை நினைத்து எண்ணிப் பார்க்கிறேன். இன்னும் சிறப்பாக யோசிங்கள். உங்களால் ஐந்து நிமிடங்கள் வீணானதை தவிர வேறு ஒன்றும் இல்லை, இது எங்களுக்கு கொண்டாட்டமான விடுமுறை, உங்களுக்கு நல்ல நாள் உண்டாகட்டும்” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக விவாகரத்து சர்ச்சைக்கு அசின் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.