கவிஞர் வைரமுத்துவிற்கும் சின்மயிக்கும் பல நாட்களாக பனிப்போர் நீடித்து வரும் நிலையில் இன்று வைரமுத்துவின் எழுபதாவது பிறந்த நாளில் முதலமைச்சர் வைரமுத்துவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தது குறித்து தற்போது சின்மயி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அவர் திமுக மீதும் முதலமைச்சர் மீதும் மிகக் காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் வைரமுத்து. இவர் திரைத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பின்னணி பாடகி சின்மயி வைரமுத்து குறித்து பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். அதில் தான் ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்று இருந்த போது வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சின்மயி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். மேலும் மீ டு என்கிற ஒரு இயக்கத்தையும் தொடங்கினார்.
அதில் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒரு மனிதனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் நேரில் சென்று இருக்கிறார். இந்த மனிதரை மீ டூ இயக்கத்தின் மூலமாக வெளிக்கொண்டு வந்ததற்காக பாடகி மற்றும் பின்னணி பேசுபவராக இருந்த நான் 2018 முதல் தமிழ் திரைப்படத்துறையால் பல தடைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். ஐந்து ஆண்டுகள் ஆகியும் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, சட்டபூர்வமான நடைமுறை தான் உங்கள் பெரிய தண்டனையாக இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் நீங்கள் எல்லாம் எப்படி நியாயம் கேட்கலாம் என்பது போல் தோன்றுகிறது. பல பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஒரு கவிஞர் பல அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் குறிப்பாக திமுகவுடன் இருக்கும் தனது நெருக்கத்தால், கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்துகிறார். இதுதான் இந்த மனிதருக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, நானும் பல பெண்களும் இது குறித்து முன்னமே ஏன் பேசவில்லை என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசும் அனைத்து பேச்சுகளும் பெண்களின் பாதுகாப்பிற்காக என்று தான். ஆனால் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் மனிதரின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். சிறந்த கலாச்சாரம் இருக்கும் இந்த மண்ணில் ஆண்களும் பெண்களும் துன்புறுத்தப்பட்ட பெண்களை குறிப்பிட்டு “வயிறு எரியுதா” என்று கேட்கிறார்கள். இது அற்புதமான பலாத்காரம் மன்னிப்பு கலாச்சாரம். பாலியல் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள், அவர்கள் குறித்து எதிராக பேசும் பெண்களை துன்புறுத்துகிறார்கள். படிப்பு, உணர்ச்சி, விழிப்புணர்வு ஆகியவை இங்கே பூஜ்ஜியமாக இருக்கிறது. பிரிஜ் போர்ஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் தப்பித்து விடுவார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் இந்த மனிதர்களை பாதுகாப்பார்கள். இந்த நிலத்தில் இல்லாத ஒரு நீதி குறித்து நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? என்று தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.