பிரபல திரைப்பட நடிகரும், பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவருமான ஆர்.எஸ் சிவாஜி உடல்நலக் குறைவால் தற்போது சென்னையில் காலமாகி இருக்கிறார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். 80-களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஆர்எஸ் சிவாஜி சமீபகாலம் வரை படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்டார்ட் மியூசிக் என்கிற நிகழ்ச்சியில் கூட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் 67 வயதான அவர் சென்னையில் இன்று மாரடைப்பு காரணமாக காலமாகிவிட்டதாக கூறப்படுகிறது. பன்னீர் புஷ்பங்கள் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆர்.எஸ். சிவாஜி.

பின்னாளில் இவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜ் உடன் இணைந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் “தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்று இவர் பேசும் வசனம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதன் பின்னர் கமலின் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார் ஆர்.எஸ்.சிவாஜி. சத்யா, மைக்கேல் மதன காமராசன், குணா, உன்னை போல் ஒருவன், அன்பே சிவம் போன்ற பல படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். மேலும் நயன்தாராவின் கோலமாவு கோகிலா சாய் பல்லவியின் கார்கி போன்ற படங்களில் நடித்திருந்தார். கார்கி படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்த படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக இருக்கும் இவர் குழந்தையை பாலியல் கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதாகி இருப்பார். தனது தந்தை மீது எந்த தவறும் இல்லை என்று போராடும் சாய் பல்லவிக்கு இறுதியில் தனது தந்தையும் சேர்ந்து இந்த தவறை செய்திருப்பது தெரியவந்து அவரை நீதிமன்றத்தில் சாய்பல்லவி பிடித்துக் கொடுத்திருப்பார். அந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. கடைசியாக நேற்று வெளியான யோகி பாபுவின் லக்கி மேன் படத்திலும் நடித்திருந்தார். பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான எம் ஆர் சந்தானத்தின் மகனான இவர் நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் கூட பங்கெடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலமாக இருக்கும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.