நித்யானந்தாவிற்கு அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இந்தியாவில் ஆன்மிகம் ஆஸ்ரமம் நடத்தி சம்பாதித்து சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா எங்கே போனார் என்று போலீஸ் தேடிக்கொண்டிருந்தபோது, அவர் கைலாசா என்ற தீவுக்குச் சென்றதாக கூறப்பட்ட நிலையில், அதை நித்யானந்தா ‘கைலாசா நாடு’ என்று அறிவித்தார். அங்கே இருந்தபடியே அவர், சமூக வலைதளங்களில் சொற்பொழிவாற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திடீரென காணாமல் போனார். அவர் கூறும் கைலாச நாடு எங்க இருக்கிறது என்பது கூட தெரியாமல் பலரும் தேடி வருகிறார்கள். இந்நிலையில், நித்யானந்தா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக, சமூக ஊடகங்களில் அவர் பேசி பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், அவருடைய ஆதரவாளர்களால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவை எனவும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நித்யானந்தா இறந்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், நித்யானந்தா அதற்கு விளக்கம் அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “27 மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை.
மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரி பூரண நலம் பெற்று திரும்புவேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னை பிடிக்காதவர்கள் நித்யானந்தா இறந்துவிட்டார் எனக் கூறி பொய்ப்பிரசாரம் செய்து வருவதாக நித்யானந்தா கவலை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பேஸ்புக் சமூகவலைதளத்தில் சில புகைப்படங்களையும் நித்யானந்தா பகிர்ந்துள்ளார்.
