
தொகுதி மறுவரையறை பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் அதை நிறைவு செய்யும் முன் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொகுதி வரையறை, இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே தொடரப்பட்டிருந்தன. இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ‘‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வராது நிலையில் தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது.ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது. உள்ளாட்சித் தேர்தல் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனிடையே, டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று அறிவித்து இருக்கிறார். மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் வியாழனன்று நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.