Categories: சினிமா

திமுகவில் இருக்கும் சாதிய பாகுபாட்டை களைய முயற்சி செய்யுங்கள்.! உதயநிதிக்கு பா ரஞ்சித் அட்வைஸ்.!

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் குறித்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதற்கு உதயநிதி தற்போது பதிலும் கொடுத்திருக்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் எம்எல்ஏவாக இருக்கும் போதிலும் அவரால் அதிகார வர்க்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், மக்களுக்கு நல்லது செய்ய முடியாமலும் இருக்கும் கருத்தை மையமாகக் கொண்டு மாமன்னன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பது குறித்து தற்போது பா. ரஞ்சித் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

திமுகவில் இருக்கும் சாதிய பாகுபாட்டை களைய முயற்சி செய்யுங்கள்.! உதயநிதிக்கு பா ரஞ்சித் அட்வைஸ்.! 1

உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் ‘சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். ‘பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் ‘சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும் கூட.

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர்
வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி” என்று உதயநிதி ஸ்டாலின் பா.ரஞ்சித்துக்கு பதிலளித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்