
தமிழில் ஐயா, சந்திரமுகி, பிகில் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நயன்தாரா. இவர்நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடன் தனது உறவை முறித்துக் கொண்டார். இதே போல நடிகர் பிரபுதேவாவுடன் உறவை முறித்துக் கொண்டார்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஊடகங்களில் பேசப்படுகிறது. இருவரும் இணைந்து இருப்பது போன்ற படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பகவதி அம்மன் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் பய பக்தியுடன் கடவுளை வணங்கினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வந்து கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக கன்னியாகுமரி கோவிலுக்கு வந்துள்ளதால் விரைவில் திருமண தேதியை அறிவிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.