யுவன் சங்கர் ராஜா உம்ரா பயணம் மேற்கொண்டது குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் நீண்ட கருத்து ஒன்று தெரிவித்திருக்கிறார். தமிழ் இசை உலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். இவர் தற்போது இஸ்லாமியராக மாறி இருக்கும் செய்தி நம் அனைவரும் அறிந்ததே. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாப்ஃரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்காக அவர் மதத்தை மாற்றிக் கொண்டார். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜாப்ஃரூன் நிஷா தம்பதியினருக்கு ஸியா என்கிற மகளும் உள்ளனர். மதம் மாறிய பின்பு தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார் யுவன் சங்கர் ராஜா. ஆனால் படங்களில் இன்னமும் யுவன் சங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா யாத்திரைக்கு சென்று இருக்கிறார். அதற்காக அவர் அந்த உடைகளை அணிந்து விமானத்தில் செல்லும் புகைப்படங்களும் யாத்திரை சென்ற பின் எடுத்த புகைப்படங்களும் அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். யுவன் விரதம் இருந்து மெக்கா மதினாவுக்கு சென்று தொழுகை நடத்தி வந்துள்ளார். இது ஹஜ் புனித யாத்திரை கடமையில் சேராது. இது உம்ரா என்று அழைக்கப்படும் யாத்திரையாகும்.்இந்த புகைப்படங்கள் வெளியான பின்பு யுவன் சங்கர் ராஜாவை சிலர் விமர்சித்து வந்தனர். திருமணத்திற்காக மதம் மாறிய இவர் உண்மையான இஸ்லாமியர் இல்லை என்று அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது. இந்த நிலையில் ராஜ்கிரன் இவன் பற்றி தனது கருத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், யுவன்சங்கர் ராஜாவின் புகைப்படமொன்று. இஹ்ராம் உடுப்பில் இருந்தார். சினிமா துறையில் இருப்பவர். பளபளப்பான ஆடைகளில் அவரை பார்த்திருக்கிறேன். இந்த ஆடை வித்தியாசமாக இருந்தது. Faqir போன்ற தோற்றம். ‘The root of suffering is attachment! ‘ என்றார் புத்தர். ஒரு இளம் துறவியைப்போல் இருக்கிறார். துறவு எப்போதும் வாழ்க்கையை மறுப்பது ஆகாது. அது இன்பத்தை மறுப்பதும் அல்ல. துறவு , உண்மையில் இன்பத்தை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கே மேற்கொள்ளப்பட்டுகிறது. யுவன் உம்ரா பயணம் மேற்கொள்கிறார். உம்ரா , இசுலாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை. இசுலாமியர்களின் கடவுள் வணக்கம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. 1. உடல் சார்ந்து. 2. பொருள் சார்ந்து. 3. உடல் பொருள் இரண்டும் சார்ந்து. பொருள் சார்ந்த வணக்கத்தை ஸதகா, ஸகாத் என்கிறார்கள். இவை ஏழைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகள்.

இறைவன், கல்வி, மருத்துவம் என இந்நிதி வணக்கம் விரிந்த தன்மை கொண்டது. உடலும் பொருளும் சார்ந்த இறைவணக்க யாத்திரைகளே உம்ராவும், ஹஜ்ஜூம். உம்ரா – தரிசிப்பது என பொருள். தைக்கப்படாத மேலாடை , கீழாடை உடுத்திய யுவனின் தோற்றம்தான் என்னை வசீகரித்தது. இதைதான், ‘உண்பது நாழி, உடுப்பவை இரண்டே’ என்கிறது தமிழ். இசுலாம் குறித்து தப்பெண்ணங்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், யுவன்சங்கர் ராஜாவின் இந்த யாத்திரை, இசுலாத்தின் மாபெரும் அமைதி விருப்பத்தை , எளிமையை, தவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. யுவன் யாத்திரைப் பாதையை, அல்லாவின் ஒளி தழுவட்டும்.