விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவர் சன் டிவிக்கு தாவி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தற்போது அவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு விலகுகிறாரோ என்கிற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. சுமார் நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சீரியலில் தற்போது கதைப்படி ஜெனி செழியனுக்கு இடையே நடக்கும் பிரச்சனையும், எழில் – அமிர்தா – கணேஷுக்கு இடையே நடக்கும் பிரச்சனையும் மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது.

பெண்கள் என்றால் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த வயதிலும் சாதிக்கலாம் சாதிப்பதற்கு வயதும் பாலினமும் ஒரு தடை கிடையாது என்கிற நம்பிக்கையோடு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சுசித்ரா செட்டி மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வர, இவர்களுக்கு கணவனாக சதீஷ் என்பவர் கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு செழியன், எழில், இனியா என்ற மூன்று குழந்தைகள் இருப்பது போலவும், அதில் செழியன் எழிலுக்கு திருமணமாகி அவர்கள் திருமணத்திலும் பிரச்சினை இருப்பது போலவும், அதையெல்லாம் பாக்யா எப்படி சமாளித்து வருகிறார்? என்பது குறித்து கதை நகர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் கோபி மற்றும் பாக்யாவின் கடைசி மகளாக இனியா என்கிற கதாபாத்திரத்தில் நேஹா நடித்து வருகிறார். இவருக்கு தற்போது சன் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை புது சீரியலில் இவர்தான் ஹீரோயினாக இருக்கும் பட்சத்தில் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேஹா நடிக்க இருக்கும் புது சீரியல் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததும் இவரது விலகலுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிள்ளை நிலா’, ‘வாணி ராணி’ போன்ற தொடர்களில் நடித்தவர் நேஹா. மூன்று ஆண்டுகளாக ‘பாக்கியலட்சுமி’ தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் இவர் வேறு புது தொடருக்கு மாற இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.