மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தற்போது நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாட்டின் நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தளம் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் சார்பாக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், “ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், “கோதாவரி காவிரி இணைப்பு துரிதப்படுத்த வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.