வணங்கான் படத்திலிருந்து சூர்யா நேற்று விலகி விட்டதாக இயக்குனர் பாலா அறிவித்திருந்த நிலையில், சூர்யா பதில் அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். வணங்கான் திரைப்படம் ஆரம்பித்த நாள் முதலே பாலாவுக்கும் சூர்யாவுக்கும் சண்டை என்றும், அதனால் பல நாட்களாக சூட்டிங் நடைபெறாமல் இருந்து வந்ததாகவும் இணையத்தில் தகவல்கள் பரவிக் கொண்டே இருந்தன. ஆனால் இதையெல்லாம் ஒரு கட்டத்தில் மறுத்த சூர்யாவும் பாலாவும் தங்கள் இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். இருப்பினும் சில காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்காமலே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சூர்யா படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் பாலா அறிவித்தார்.

இயக்குனர் பாலா வெளியிட்டு இருந்த அறிவிப்பில் இந்த கதை மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் தம்பி சூர்யா. என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் சூர்யாவுக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனவே நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவு எடுத்து இருக்கிறார். அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைகிறோம். மற்றபடி வணங்கான் படத்தின் படப்பிடிப்புகள் தொடரும் என்று பாலா அறிவித்திருந்தார். தற்போது அவரின் இந்த அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் ரீ ஷேர் செய்திருக்கும் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம், பாலாவிற்கு பதில் ஒன்றை அளித்திருக்கிறது.

அதில் அவர்கள் பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யாவும் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனமும் வணங்கான் படத்திலிருந்து விலகிக் கொள்கிறோம், எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம் என்று பதிவிட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் தொடரும் என்று அறிவித்திருக்கும் நிலையில் புதிய நடிகர் யார் சூர்யாவுக்கு மாற்றாக நடிக்கப்போவது யார்? இந்த படத்தை எந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பதெல்லாம் குறித்து விரைவில் பாலா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!