பல நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் வடிவேலுவின் தம்பி இன்று காலமாகி இருக்கிறார். இந்த செய்தி வடிவேலு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகின் காமெடி ஜாம்பவனாக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. பல ஆண்டுகளாக காமெடி துறையில் இருந்த இவர் சில நாட்களாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் விலகி இருந்தார். தற்போது மீண்டும் படங்களில் காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்திருக்கிறார் வடிவேலு. சந்திரமுகி பாகம் இரண்டில் மீண்டும் காமெடி ட்ராக்கில் பிடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் இன்று காலமாக இருக்கிறார் அவருக்கு வயது 52.

தனது அண்ணனைப் போலவே தானும் படங்களில் நடிக்க வேண்டும் மிகப்பெரிய காமெடி நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரும் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பின்னர் சில சொத்து பிரச்சனை காரணமாக மதுரைக்கே திரும்பி அவர் அங்கேயே இருந்து விட்டார். சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். “இனிமேல் தனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தால் பார்ப்போம், நான் சட்டை போன்ற ரெடிமேட் துணிகள் வியாபாரம் செய்து வருகிறேன்” என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஏற்கனவே கல்லீரல் பாதிப்பால் பல நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலை விரகனூரில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து மதுரை விரைந்து இருக்கிறார். வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஜனவரி மாதம் காலமாகி இருந்தார்.

இந்த நிலையில் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் ஏழு மாத இடைவேளையில் காலமாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெகதீஸ்வரன் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.