ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியாராகம்’ சீரியலில் இருந்து ஹீரோயின் விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார். அவரின் instagram பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கி 75 எபிசோடுகளை கடந்து இருக்கிறது ‘சந்தியா ராகம்’ சீரியல்.

இந்த தொடரில் ஜானகி மற்றும் சந்தியா என்று இரு சகோதரிகள் இருக்கிறார்கள். அக்கா ஜானகிக்கு பார்க்கும் மாப்பிள்ளையை தங்கை சந்தியா திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. சந்தியாவை அவருடைய தந்தை வீட்டை விட்டு அடித்து துரத்தி விடுகிறார்.

வீட்டில் இருந்து வெளியேறும் சந்தியா தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிறார். தன்னுடைய அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொண்டு விட்டோமே என்று சொல்லி சந்தியா மிக வருத்தம் அடைகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் சந்தியா புற்றுநோயால் இறந்து விட, அவரது மகள் மாயாவை ஜானகி தன்னுடன் அழைத்து வருகிறார். மாயா அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததால் அவருக்கு கிராமத்தில் வாழ சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்த நிலையில் ஜானகியின் மகளாக இருக்கும் தனத்திற்கும், மாயாவுக்கும் இடையே இருக்கும் அன்பின் வெளிப்பாடாக இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கதையில் ஜானகியின் மகளாக தனம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்தான் விஜே தாரா. தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாரா, “கனத்த இதயத்துடன் ‘சந்தியாராகம்’ தொடரில் இருந்து வெளியேறுகிறேன். அங்கு என்ன பிரச்சனை என்பதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு வாய்ப்பளித்த தொலைக்காட்சிக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன், புதிதாக வரும் ஹீரோயினுக்கு இதுபோல் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்” என்று பதிவிட்டு விட்டு சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் எதற்காக விலகினார்? அப்படி என்ன வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சினை என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.