ராமச்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உட்பட 49 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறுவதாக பீகார் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்நகர் கும்பல் தாக்குதல்களை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, நடிகை ரேவதி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
இதனை தொடர்ந்து, பீகார் மாநில வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன், பிரிவினைவாத போக்குகளை ஆதரித்ததற்காக கூறி முசாபர்நகர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கினைத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், முசாபர்நகர் போலீசார், தேச துரோகம், பொது அமைதியை குலைத்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கினை பதிவு செய்தனர்.
இது நாடு முழுவதும் பெரும் பரபராப்பை ஏற்படுத்திய நிலையில், மேலும் 185 கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், “ஒரு சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக அவர்களது கடமையை செய்தனர். இதனை தேச துரோக செயல் என்று சொல்லி, மக்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நீதிமன்றங்களை பயன்படுத்தவது தவறானது. இதற்காக தான் நாங்கள் தினந்தோறும் எங்கள் குரல்களை ஒலித்து வருகிறோம் என கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக முசாபர்பூர் எஸ்எஸ்பி மனோஜ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். இதனை சுட்டி காட்டி பேசிய அவர், “இந்த வழக்கில் அடிப்படை குற்றசாட்டுகள் போதிய அளவு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு பொருளற்றதாக இருக்கிறது” என்றார்.
மணி ரத்தினம் உட்பட 49 பேர் மீது வழக்கு தொடுத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் இவர் மத்திய உணவு பாதுகாப்பு துறை அமர்ச்சரான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜான்ஷக்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.