
இந்திய நாட்டிலேயே இரண்டாவது புண்ணிய தலமாக தமிழ் நாட்டின் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மத்திய அரசு 10 புண்ணிய தலங்களை தேர்வு செய்து சுகாதாரம் மற்றும் தூய்மை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் ஒரு சிறந்த திட்டமாகும். இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள முக்கிய புண்ணிய தலங்களை தேர்வு செய்து அவற்றை தூய்மையான தலங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சுமார் 25 நவீன வசதிகளை கொண்ட மின்னணு கழிவறைகள் வைக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் ஆங்காங்கே இரட்டை குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவு பணியாளர்கள் 24 மணி நேரமும் துப்புரவு பணி செய்வதற்காக உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் 4 மினி காம்பேக்டர் லாரிகள், 63 காம்பேக்டர் பின்கள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி இயந்திரங்கள், நவீன மண் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பக்தர்களை அழைத்துச் செல்ல 5 பேட்டரி வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தலங்களை தூய்மையின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்தியாவின் இரண்டாவது தூய்மையான புண்ணிய தலம் என்ற பரிசு வழங்கப்பட்டது.
டெல்லியில் செப்டம்பர் 9 ஆம் தேதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத் மற்றும் துணை அமைச்சர் ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா அவர்கள் இரண்டாவது பரிசுக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினர்.
இந்தியாவின் முதலாவது புண்ணிய தலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.