
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களின் அரசு உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கைபேசிகளைப் (மொபைல் போன்கள்) பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் உயர்கல்வி இயக்குநரகம் இன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் கைபேசிகளைக் கொண்டு வருவதற்கும் தடை விதித்து உள்ளது. இது அங்குள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளனர். ஆசிரியர்களும் வகுப்பறையில் மொபைல் போன்கள் உபயோகிப்பதற்குத் தடை விதித்துள்ளனர்.
உத்தரபிரதேச முதலமைச்சர் அவர்கள் தனது அமைச்சரவைக் கூட்டங்கள் உட்பட தனது உத்தியோகபூர்வ கூட்டங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதை ஏற்கனவே தடை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரிகளிலும் தடை செய்துள்ளார். அவர் கூறியதாவது மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களின் பொன்னான நேரத்தை கைபேசியை உபயோகித்து வீணாக்குகிறார்கள். மேலும் சில அமைச்சர்கள் முக்கியமான கூட்டங்களின் போது மொபைல் போனின் வாட்ஸப் செய்திகளைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதால் யு.பி. முதலமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.