
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் வில்லியனூர், அரியாங்குப்பம், திருவாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கனமழை தொடரும். கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகை, சிவகங்கை மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம்,கடலூர்,தூத்துக்குடி,நீலகிரி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்டசமாக மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மாலத்தீவு, கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.