சின்னத்திரை நடிகை ரட்சிதாவுக்கும் தனக்குமான பிரிவு குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் ரட்சிதாவின் கணவர் தினேஷ். பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை ரட்சிதா. முதல் நாடகத்திலேயே தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் சில தொடர்களில் நடித்த போதும் இவரால் பெரிய அளவில் பிரபலம் ஆக முடியவில்லை. பின்பு சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். அந்த தொடர் ரட்சிதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்றளவும் அந்த தொடர் பேசப்படுவதற்கு ரட்சிதாவின் நடிப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருப்பார். சமீபத்தில் கூட நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த தொடரிலிருந்து விலகினார்.

அதற்கான காரணத்தை சொல்லும் போது இந்த சீரியலில் கதாநாயகியே தேவையில்லை, எதற்கு என்னை கதாநாயகியாக வைத்துள்ளனர் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறிவிட்டு நாடகத்திலிருந்து விலகினார் ரட்சிதா. பின்னர் ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சிகளில் நடிக்கத் தொடங்கினார். இவரின் கணவர் தினேஷ். இவரும் ஒரு சின்னத்திரை கலைஞர் ஆவார். இருவரும் இணைந்து சில நாடகங்கள் நடித்துள்ளனர். மேலும் பேட்டிகளின் போது தான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் தனது கணவர் தினேஷ்தான் என்று கூறி வந்தார். அப்படிப்பட்ட நிலையில் ரட்சிதா தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தார். இதனால் ரட்சிதாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் பேசாமல் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் கூர்க்கை பூர்வீகமாக கொண்ட ரட்சிதா, தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 2013ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. 9 ஆண்டு காலம் கணவன் மனைவிகளாக வாழ்ந்த இவர்கள் தற்போது திருமண உறவை முறித்துள்ளனர். ரட்சிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் தினேஷுக்கு வாய்ப்புகள் வராத காரணத்தால் மனஸ்தாபத்தால் பிரிந்துவிட்டனர் என்றும், மேலும் திருமணம் ஆகி 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாததும் பிரிவுக்கு ஒரு காரணம் எனவும் தகவல்கள் வெளியானது. இருவருமே பிரிவு குறித்து அதிகாரப்பூர்வமாக பேசாத நிலையில் வதந்திகள் கொடிகட்டிப் பறக்க தொடங்கின. இந்த நிலையில் முன்முறையாக பிரிவு குறித்து ரட்சிதாவின் கணவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

ரட்சிதாவுக்கும் தனக்கும் உள்ள பிரச்சினை தற்காலிகமானது தான். சமூக வலைத்தளங்களில் தவறு தவறாக செய்தி போடுறாங்க. ஆனா என்ன விட ரட்சிதா தைரியமானவங்க. இந்த சூழ்நிலையை என்னவிட அவங்க நல்லா கையாளுவாங்க என்று கூறியுள்ளார். சமீபகாலமாக ரட்சிதா தயாரிப்பாளர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து பேசிய அவர், நானோ, ரட்சிதாவோ இந்த நிமிடம் வரை அதிகாரப்பூர்வமாக பிரிவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். எல்லா பாரத்தையும், காலம் மீது போட்டுவிட்டு அமைதியாக இருப்பதாகவும், எந்த மாதிரியான கடுமையான சூழ்நிலையையும் காலம் மாற்றிவிடும் என்றும் தினேஷ் கூறினார்.
