தமிழில் கடந்த 2005 ஆம் வருடம் வெளியான படம் தான் சந்திரமுகி. இந்தப் படத்தை 90ஸ் கிட்ஸ்களால் மறக்கவே முடியாது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு 90ஸ் கிட்ஸ்கள் பலர் இரவில் பயந்து தூங்காமல் இருந்த கதைகளும் உண்டு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதில் ஜோதிகா ‘சந்திரமுகி’ என்னும் பேயாக நடித்திருப்பார். இந்தப் படம் மலையாளத்தில் வெளியான “மணி சித்திரத்தாளு” என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தை இயக்குனர் பி வாசு இயக்கி இருந்தார். மிக வெற்றிகரமாக ஓடிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது, இரண்டாம் பாகத்தையும் பி வாசுவே இயக்குகிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இரண்டாம் பாகத்திலும் காமெடியனாக வடிவேலு நடிக்கிறார். ஆனால் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது ஆரம்பத்தில் திரிஷாவிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் திரிஷா பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. பிறகு அனுஷ்கா இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பின்னர் லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஷூட்டிங் தொடங்கி பல நாள் ஆகியும் யார் சந்திரமுகியாக நடிப்பார்கள் என்ற தகவல் உறுதிப்படுத்த படாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் பிரபல வட இந்திய நடிகையான கங்கனா ரணாவத் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக லைகா நிறுவனமே புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கதாபாத்திரத்தை கங்காணாவே பி.வாசுவிடம் கேட்டு பெற்றுள்ளதாக தெரிகிறது. ஜோதிகா இடத்தை கங்கனா பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
