பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு இன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்ற திரை விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பல இயக்குனர்களின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை படமாக்கி காட்டி சாதனை புரிந்திருக்கிறார் மணிரத்தினம். பல வருடங்களாக புத்தகத்தில் கற்பனை கதாபாத்திரங்களாக நம் கண்ணில் விரிந்த ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்திய தேவன், நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்கடியான் நம்பி, ஊமை ராணி என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்து உருவமாக்கி இருக்கும் மணிரத்தினத்திற்கு முதலில் நமது பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும். முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருக்கும் நிலையில் படத்தின் இரண்டாம் பாகமும் வசூலை குவிக்குமா இல்லையா என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது விரிவாக பார்க்கலாம்.

இலங்கையில் ஈழத்துப்போரில் இருக்கும் அருள்மொழிவர்மன் உடனடியாக தஞ்சை திரும்புமாறு உடல் சுகம் இல்லாத அவருடைய தந்தை சுந்தர சோழர் கட்டளையிடுகிறார். குந்தவையும் வந்திய தேவனை ஒற்றர் போல அனுப்பி ராஜ ராஜ சோழனை வரவழைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார் இதற்காக பலரும் பலகட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தளபதிகளாக இருக்கும் பழுவேட்டரையர்கள் அருள்மொழி வர்மரை கைது செய்து அழைத்து வர திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் ஈழத்தில் நடக்கும் ஒரு சண்டையில் கப்பல் உடைந்து அருள்மொழி வர்மனும் வந்திய தேவனும் கடலுக்குள் மூழ்கிப் போகின்றனர் அருள்மொழி வர்மரை கடல் கொண்டு விட்ட செய்தி தஞ்சையில் இருக்கும் சுந்தர சோழருக்கும் குந்தவைக்கும் கிடைக்க அவர்கள் இருவரும் மனமடைந்து போகின்றனர். தனது தம்பி இறந்த செய்தி கேட்டு கோபம் கொள்ளும் ஆதித்த கரிகாலன் இதற்கெல்லாம் காரணம் நந்தினி தான் என்று சொல்லி நந்தினி இருக்கும் கடம்பூர் மாளிகையை நோக்கி கிளம்பி வந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கடலில் விழுந்த மந்தாகினி என்னும் ஊமை ராணி அருள்மொழி வர்மனை காப்பாற்றுகிறார். இதற்கிடையில் சுந்தர சோழனின் அண்ணன் மகனாக இருக்கும் மதுராந்தகன் தனக்கு மணிமகுடம் வர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

ஒருபுறம் இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பாண்டிய இளவரசன் அமர புஜங்கன் சோழர் அரியணையில் அமர வேண்டும் என்று நந்தினி சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார். கடம்பூர் மாளிகைக்கு வரும் ஆதித்த கரிகாலனை நந்தினி கொலை செய்தாரா? அருள்மொழிவர்மனுக்கும் வானதிக்கும் திருமணம் ஆனதா? வந்திய தேவன் குந்தவையின் காதல் என்ன ஆனது? அடுத்த பட்டத்திற்கு உரியவனாக இருக்கும் உத்தமன சோழனுக்கு மணிமகுடம் சூட்டினரா? என்று பல திருப்பங்களுடன் இந்த படத்தை முடித்து இருக்கிறார் மணிரத்னம். அரசியல் சூழ்ச்சிகளும் வரலாற்றுப் புனைவுகளும், புனைவு கதாபாத்திரங்களும் கொண்டு மிக அழகான ஒரு நாவலை கல்கி படைத்து இருப்பார். இந்த கதையை படமாக்க வேண்டும் என்கிற பெரிய ஒரு டாஸ்கை மணிரத்தினம் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக சுருக்கி எவ்வளவு சுவையாக கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சுவையாக கொடுத்திருக்கிறார் மணிரத்தினம். அதற்காக முதலில் அவருக்கு அந்த பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும்.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் எல்லாம் முழுவதும் கற்பனை நிறைந்த படங்களாகும். ஆனால் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலை எடுத்துக்கொண்டு அதை தனது இயக்கத்தின் மூலம் படமாக்கி தன்னால் முடிந்தவரை அதற்கு நியாயம் செய்து இருக்கிறார் மணிரத்னம். குறைந்த நாட்களில் இவ்வளவு பெரிய படத்தை எடுத்து முடித்து இருப்பதுவே பெரிய சாதனை தான். ஆதித்த கரிகாலன் வீரம் பொருந்தியவனாக இருந்த போதிலும் நந்தினியின் மீது இருக்கும் காதலால் அவன் குழந்தையாக மாறிவிடுவதும், பழி வாங்கத் துடிக்கும் விஷத்தை கக்கும் பாம்பாகவும், விழிகளிலேயே மிரட்டும் கதாபாத்திரமாகவும் நந்தினியும், சேட்டை பிடித்த வீரனாக இருக்கும் வந்திய தேவனும், நிதானமும் அழகும் மதிப்பொருந்திய முகமும் இருக்கும் அருள்மொழி வர்மனும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை அறிவுடன் கூடிய ஆற்றலும் இருக்க வேண்டும் என்று குந்தவையும் தங்களது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கின்றனர். நடிகர்களின் தேர்வும் அவர்கள் கொடுத்த பங்களிப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு ஷாட்டிலும் சோழ தேசத்துக்கே உரிய அழகையும் அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் சென்ற உணர்வையும் ரவிவர்மனின் ஒளிப்பதிவு நமக்கு கொடுத்திருக்கிறது. ஆங்காங்கே வரும் பின்னணி இசையும் பாடல்களும் ஏ ஆர் ரகுமானின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கற்களாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதர் பிரசாத்தின் எடிட்டிங், தோட்டா தரணியின் பிரம்மாண்ட செட் அமைப்புகள் என்று ஒவ்வொரு கலைஞரின் உழைப்பும் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது. சீயான் விக்ரமின் அசாத்திய நடிப்பும், ஐஸ்வர்யாராயின் டபுள் ரோலும், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி ஆகியோரின் கச்சிதமான கைதேர்ந்த நடிப்பும் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. படத்தின் மைனஸ் ஆக சிலரால் பார்க்கப்படுவது, மணிரத்னம் படத்திற்கு ஏற்றவாறு சில காட்சி அமைப்புகளை மாற்றி அமைத்திருப்பது தான். நாவல் படித்தவர்களுக்கு இந்த மாற்றம் பெரிய குறையாக தெரிகிறது. குறிப்பாக ஆதித்த கரிகாலன் ஒரு வட சைன்யத்தின் மாபெரும் வீரன். வடபகுதியை ஆண்டு கொண்டிருந்த ராஷ்டக்கூட மன்னர்களை எல்லாம் தனது காலடியில் விழ வைத்தவன். அவன் என்னை கொன்று விடுங்கள் கொன்றுவிடுங்கள் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. நாவலில் அதுபோன்ற பகுதிகளே இல்லை, ஆனால் மணிரத்னத்திட் சில காட்சி அமைப்புகளை இவ்வாறு அமைந்திருப்பது நாவல் படித்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

இதே போல பாகம் 1 இல் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசன் ராஜராஜ சோழனுக்கு பயந்து இலங்கையின் உட்பகுதியான மலைப் பகுதியில் ஒளிந்து கொண்டிருப்பான். ஆனால் அருள்மொழி வர்மரோ தமிழ்நாட்டில் இருந்து மிக அருகில் இருக்கும் இலங்கை பகுதியில் தான் இருப்பார். இலங்கையில் காலடி எடுத்து வைத்த ராஜராஜ சோழனுக்கு பயந்து மன்னன் ஓடி ஒளிந்து கொள்வது போல கல்கி எழுதி இருப்பார். ஆனால் மணிரத்தினமோ இலங்கை அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருப்பது போலவும், மற்றொரு மூலையில் ராஜராஜசோழன் தனது படைகளுடன் இருப்பது போலவும், அந்த இலங்கை மன்னனிடம் பாண்டிய ஒற்றன் ராஜராஜ சோழனை காட்டிக் கொடுப்பது போலவும் மாற்றி அமைத்திருப்பார். இதெல்லாம் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு நாவலில் இருப்பதை அப்படியே எடுத்திருந்தால் பொன்னியின் செல்வன் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்று நாவல் படித்தவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5
Youtube Video Embed Code Credits: Sun TV