கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கும் ஒரு நிகழ்வு தான் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவியின் திருமண முறிவு. 11 ஆண்டுகளாக இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பிறகு, தனித்தனி பாதைகளில் பயணிக்க இருப்பதாகவும், இருவரும் பரஸ்பரம் பேசி பிரிந்து விட்டதாகவும் சமூக வலைதளம் மூலமாக அறிவித்திருந்தனர். அவர்களின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத ரசிகர்கள் கவலை அடைந்தனர். மேலும் இருவரின் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கின.

குறிப்பாக ஏ.ஆர். ரகுமானின் சகோதரியின் மகனாக இருக்கும் ஜிவி பிரகாஷ் இஸ்லாமிய வழி வந்தவர் என்றும், ஆனால் சைந்தவியின் தாயார் உயர்சாதி இந்து பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், இவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை என்றும் சைந்தவியின் தாயாருக்கும் ஜி.வி பிரகாஷின் குடும்பத்திற்கும் முட்டல் மோதல்கள் இருந்து வந்ததாகவும் செய்திகளில் தகவல் பரவத் தொடங்கியது. மேலும் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி பிரகாஷ் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி வருவதும் பிரிவுக்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவிற்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்தப் பின்பு தான், இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு தனிமனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும், ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு கீழே கமெண்ட் பகுதியை ஆஃப் செய்து விட்டு பதிவை பகிர்ந்து உள்ளார்.