விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து எழில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வி.ஜே விஷால் திடீரென விலகி இருக்கிறார். அவரது விலகல் குறித்து எந்த காரணமும் தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர். சீரியலில் இருந்து ஏதாவது நடிகர்கள் விலகுவதாக இருந்தால் முன்பே தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு, விஷயம் வெளியில் கசிந்து விடும். ஆனால் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஷால் விலகியது குறித்து எந்த சலசலப்பும் இல்லை திடீரென அவரது கதாபாத்திரம் மாற்றப்பட்டிருந்தது.

அதற்கு ரசிகர்கள் பல காரணங்களை கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் எழில் கதாபாத்திரம்தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ஹீரோ கதாபாத்திரம் போல கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கதையின் போக்கால் எழில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள் எழில் கதாபாத்திரத்தை டம்மியாக மாற்றியதால் தான் அவர் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ அவருக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும் அதனால் வெளியேறி இருக்கலாம் என தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சீரியலை விட்டு விலகிய பிறகு முதல் முறையாக பதிவு ஒன்றை பகிர்ந்த வி.ஜே விஷால் சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் அதை சரியானதாக மாற்றுவேன் என பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஒருவேளை சீரியல் குழுவினருக்கும், வி.ஜே விஷாலுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்திருக்குமா? என கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ், விஷால் விலகல் குறித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அவர் பேசும் பொழுது, “முதலில் புதிதாக நடிக்க வந்த நடிகருக்கு வாழ்த்துக்கள். அவருக்கும் ஆதரவு கொடுங்கள். ஆனால் விஷால் ஏன் சீரியலை விட்டு விலகினான் என தெரியவில்லை. அது அவரின் தனிப்பட்ட முடிவு. கிளிக்கு இறக்கை முளைத்து விட்டது. எனவே அவர் முடிவை நாம் மதிக்க வேண்டும். அவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்.” என வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram