இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் தாதா என புகழாரம் சூட்டப்பட்டாவருமான கங்குலி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இன்று (அக்.23) பொறுப்பேற்றார்.
இதுகுறித்து பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில், “பிசிசிஐ தலைவராக கங்குலி முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளது.

மும்பையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து, துணைத் தலைவராக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகிம் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா செயலாளராகவும், நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் அனுபவமிக்க இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவரான கங்குலி, மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். ஆகையால் அவரது நீண்ட நெடிய அனுபவம் அவருக்கு உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த முடிவெடுப்பதில் கங்குலியின் பங்கு அதிகாமாக இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான வினோத் ராய் இருந்தார். இவர் இந்தியாவின் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆவார். தற்பொழுது இரயில்வே துறைக்கு வெளித் தணிக்கையர்கள் மற்றும் மதிப்புறு ஆலோசகர்கள் அடங்கிய குழுவுக்குத் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.