பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு இன்று (அக்.23) ஜாமின் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசியலின் முக்கிய புள்ளியான டி.கே.சிவகுமார், முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர். அது மட்டுமின்றி காங்கிரசின் அசைக்க முடியாத தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் மீது நில மோசடி மற்றும் சட்டத்திற்கு விரோதமான பண பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து, வருமான வரி சோதனைக்கு ஆளானர் சிவகுமார். உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் கணக்கில் வராத ரூ.8.59 கோடி கைப்பற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
சுமார் 2 மாதங்களாக சிறையில் இருந்த அவர், முன்னதாக ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. டிகே சிவக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், வெளிநாடு செல்ல கூடாது என்ற நிபந்தையுடன், ரூ.25 ஆயிரம் சொந்தப்பிணையில் டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.