மருத்துவர் ராமதாஸின் பொய்யான அறைகூவலை நம்பி டாக்டர் சீனிவாசன் மண் குதிரை ஏறி ஆற்றில் இறங்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தை பார்த்து விட்டு “அசுரம் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்” என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இது பாமக தலைவர் மருத்துவர் இராமதாஸிற்கு எரிச்சலூட்டவே, “முரசொலி அலுவலகம் உள்ள இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமானது. திமுக ஆட்சியில் முரசொலி அலுவலகத்திற்காக பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டது” என்று குற்றம் சாட்டினார்.
இந்த விடயம் பெரிதாகவே, திமுக தரப்பிலும் பட்டா சான்றுகளை எடுத்துக்காட்டினார். ஆனால் விடாது மருத்துவர், மூலம் பத்திரத்தை வெளியிட சொல்லி கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து, பாஜகவின் மாநில செயலாளராக உள்ள டாக்டர் சீனிவாசன், இது குறித்து விசாரணை மேற்கொள்ள, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தார். இம்மனுவை அடுத்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஆணையம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சர்ச்சைகள் பெரிதாகிக்கொண்டே போகையில், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை முழுமையாக பின்வருமாறு,
“பொய்மையையே மூலதனமாக வைத்து, அரசியல் வியாபாரம்
நடத்தி வரும் மருத்துவர் அய்யா ராமதாஸ், திடீரென கற்பனையான
ஒரு ஆராய்ச்சி நடத்தி, தற்போது “முரசொலி” அலுவலகம் இருக்கு
மிடம் “பஞ்சமி” நிலம் என ஒரு செய்தி வெளியிட்டார். அது
“பஞ்சமி” நிலம்; “பட்டா நிலம்” என்பதை ஆதாரத்துடன்
வெளியிட்டு அது பஞ்சமி நிலம் என்பதை மருத்துவர் அய்யா
நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார்; அப்படி நிரூபிக்காவிடில் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என நான்
அறைகூவல் விடுத்திருந்தேன்.

அதனை ஏற்றிட முன்வராத மருத்துவர், முரசொலி அலுவலகம்
உள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும்
வெளியிடாமல், விவகாரத்தைத் திசை திருப்ப முயன்று, “மூலப் பத்திரத்தை வெளியிடவில்லை பட்டா மட்டும் வெளியிட்டுள்ளனர்” என்று அறிக்கை விட்டார். மருத்துவர் ராமதாஸ் நான் விடுத்த அறைகூவலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வாய் மூடி மவுனமானார்.
இப்போது, ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில்,
பாரதீய ஜனதாவின் மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன்,
இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனு தந்துள்ளதாக தனது
“டிவிட்டர்” பக்கத்தில் பதிவு செய்து, அது செய்தியாக ஊடகங்களில்
வருகிறது! மருத்துவர் ராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில்
ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன்! அவருக்காக
அனுதாபப்படுகிறேன்! மருத்துவர் இராமதாசு கைப்பாவையாகி
செயல்படத் தொடங்கி யுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக்
கொள்ள விரும்புகிறேன். துளி கூட உண்மையில்லா, ஜமுக்காளத்தில்
வடிகட்டிய ஒரு பொய் குறித்து ஆதி திராவிடர் தேசிய
ஆணையத்துக்குச் சென்று, நேரத்தை வீணடிப்பது விட, அவர்
இப்போது கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. வின் முன்னாள் தலைவி செல்வி ஜெயலலிதாவினால் பையனுார் பங்களா கட்ட
கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக்
கைப்பற்றும் முயற்சியில் மருத்துவர் அய்யாவின் இணைந்து
செயல்பட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போதும் காலம் கடந்து விடவில்லை; மருத்துவர் ராமதாஸ்
அவர்களுக்கு நான் ஏற்கனவே விடுத்த அறைகூவலை இப்போதும் வலியுறுத்துகிறேன். முரசொலி அலுவலகம் இருக்குமிடம் “பஞ்சமி”
நிலம் என்பதை நிரூபிக்க, மருத்துவர் ராமதாஸ் முன் வருவார?
அவரது கைப்பாவையாகச் செயல்படும் சீனிவாசன், ராமதாசை
வலியுறுத்த முன் வருவாரா?”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.