நடிகர் சிவாஜி- இந்த பெயருக்கு தமிழகத்தில் சினிமா இருக்கும் வரை அறிமுகம் தேவையில்லை. நடிப்பு சக்கரவர்த்தியாக கால்நூற்றாண்டு காலம் மொத்த திரை ரசிகர்களையும் ஆட்கொண்டவர். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவர், 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அந்த பின் நடந்தவை மக்களுக்கு நன்கு அறியும்.

காமெடி, ஆக்ஷன், திரில்லர், குடும்பம், செண்டிமெண்ட்,நாட்டுப்பற்று, ஆன்மீகம், ராஜாகாலத்து படங்கள் என பல வகை படங்களிலும் பல வகை கதாபாத்திரங்களிலும் நடித்து இப்போதும் படம் பார்க்கும் பொது நடிகர் சிவாஜியாக நம் கண்ணிற்கு தெரியாமல் அந்த கதாபாத்திரம் மட்டுமே தெரியும். கொடிகாத்த குமாரனாக, கப்பலோட்டிய தமிழனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, ஜஸ்டிஸ் சவுதாரியாக இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

சிவாஜியின் மிக முக்கிய படம் என்றால் அது பராசக்தி. அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்றளவும் தமிழக மக்களிடம் மிகவும் பேசப்படும் படமாக இருக்கும் இந்த படத்தின் நாயகன் வீட்டிலிலேயே இப்பொது சொத்து தகராறு பிரச்சனை வந்துள்ளது. சிவாஜிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்என சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என்று நான்கு பிள்ளைகள்.

சிவாஜிகணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருந்தார் அதன் இன்றைய மதிப்பு சுமார் 270 கோடியாகும். சிவாஜிகணேசன் மறைவுக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அவர்கள் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு தெரியாமல் சொத்துக்களின் பல பங்குகளை தங்களுக்கு தெரியாமல் அண்ணன்கள் ராம்குமாரும், பிரபுவும் விற்றுவிட்டார்கள் என சாந்தி மற்றும் ராஜ்வி தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் தங்களின் தாய்வழி சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு வழங்கவில்லை எனவும் அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 சவரன் தங்கம் வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை தங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். இதுபோல் கோபாலபுரத்தில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் விற்று விட்டதாகவும் ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகை கூட தங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை எனும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் “நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல” என்றும் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக மீண்டும் நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்கள் தொடர்ந்து உயிலின் நம்பகத்தன்மை குறித்தும், அது பொய்யானது என்றும் கூறி வருவதாக, ராம்குமார் மற்றும் பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும், உயிலின் அடிப்படையில்தான் சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. வாதங்கள் முடிவடையாததால், ராம்குமார் மற்றும் பிரபு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.