விருமன் படத்தை பார்த்து காப்பி அடித்துத்தான் திருச்சிற்றம்பலம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு புரளி ஒன்று கிளம்பி இருக்கிறது. கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள இரண்டு படங்கள் தான் விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம். விருமன் படம் ஒரு வாரத்தை கடந்து விட்ட நிலையில் 40 கோடி வசூலையும், திருச்சிற்றம்பலம் வெளியான இரண்டே நாளில் 20 கோடி வசூலையும் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாகவே இருக்கின்றது. வார இறுதி நாட்கள் என்பதால் இரண்டு படங்களுக்கும் வசூலை குவித்து வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே ஒரு வார கால இடைவெளியில் வெளியாகின. ஆகஸ்ட் 12ஆம் தேதி விருமனும், ஆகஸ்ட் 19ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படமும் வெளியாகின. இரண்டு படங்களுமே வெளியான போது 3 நாட்கள் விடுமுறை இருந்தால் நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான் என்று யாரோ வதந்தியை கிளப்பி விட்டடுள்ளனர். கைதி படத்திற்கு பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான தம்பி மற்றும் சுல்தான் போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை. அதேபோல் தனுஷிற்கு கர்ணன் படத்திற்கு பின்னர் திரையில் எந்த படமும் வெளியாகவில்லை. கர்ணனுக்கு பிறகு ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே, மாறன் போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் தான் வெளியாகின. இதனால் இருவருன் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால் படங்கள் வெளியான பின்பு இரண்டு கதைகளும் ஒரே கதை போல் தோன்றுகிறது. அதற்கான விளக்கங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். விருமன் படத்திலும் கார்த்திக் அப்பா பிரகாஷ் ராஜ் தான், திருச்சிற்றம்பலம் படத்திலும் பிரகாஷ் ராஜ் தான் அப்பா. அங்கேயும் அப்பா மகன் சண்டை, இங்கேயும் அப்பா மகன் சண்டை.

அங்கே அப்பா தாசில்தார் இங்கே அப்பா போலீஸ் அதிகாரி. அங்கே ஹீரோவுக்கு ஆறுதல் மாமா ராஜ்கிரண், இங்கே தாத்தா பாரதிராஜா, அங்கே காதலியாக உறவுக்காரப் பெண் தேன்மொழி, இங்கே சிறுவயது பக்கத்து வீட்டுப் பெண் ஷோபனா. அங்கே அப்பா மகன் பிரச்சினைக்கு காரணம் ஹீரோவின் அம்மா இறந்துவிடுவது. இங்கேயும் ஹீரோவின் அம்மாவும், தங்கையும் இறந்தது தான் சண்டைக்கு காரணம். அங்கேயும் ஒரு கட்டத்தில் அப்பாவும் மகனும் புரிந்து கொண்டு இணைந்து விடுவார்கள், இங்கேயும் அப்படிதான். எனவே இரண்டு படங்களையும் பார்த்த நெட்டிசன்கள் யார் யாரை பார்த்து காப்பி அடித்தார்கள் என்று தெரியவில்லை என்று இரண்டு படங்களையும் கலாய்த்து வருகின்றனர். பிரகாஷ்ராஜ் போன்ற நல்ல வில்லத்தனம் செய்யும் நடிகர்களுக்கு சிறந்த கதாபாத்திரத்தை வடிவமைக்க தவறியதால் தான், இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.