
ரஷ்யாவில் உள்ள உலன்-உடேவில் இன்று நடைபெற்ற மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார். தனது அறிமுகப் போட்டியிலேயே மஞ்சு ராணி அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வந்தது. அதன் அரை இறுதிச்சுற்றிற்கு 4 இந்திய வீராங்கனைகளான மேரி கோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் தகுதி பெற்று இந்தியாவிற்கு நான்கு பதக்கங்களை உறுதி செய்தனர்.
சனிக்கிழமையான நேற்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்தியாவின் சிறந்த குத்துச்சண்டை வீரர் மேரி கோம் துருக்கி வீராங்கனை காகிரோக்லுவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதனை எதிர்த்து மேரிகோம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தொழில்நுட்ப கமிட்டி மேரி கோமின் அப்பீலை நிராகரித்தது.

அடுத்து 54 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ஜமுனா போரோ ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னிடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இதே போல் 69 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் சீனாவின் யாங் லியிடம் தோல்வி அடைந்து மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மஞ்சு ராணி ரஷ்யாவின் எகடெரினா பால்ட்சேவாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். தனது அறிமுகப் போட்டியிலேயே மேரி கோமைப் போல் அரை இறுதியில் நுழைந்த இந்திய வீராங்கனை ஆவார். மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவின் பழமையான மற்றும் மிகவும் போட்டி குத்துச்சண்டை நிகழ்வுகளில் ஒன்றான மதிப்புமிக்க ஸ்ட்ராண்ட்ஜா நினைவு போட்டியில் தனது அறிமுக வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.