இந்திய மகளிர் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது தாய்மொழியான ‘தமிழில்’ சரளமாக இல்லை என்று விமர்சித்த ரசிகருக்கு சரியான பதிலைக் கொடுத்துள்ளார்.மிதாலி ராஜ் ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கில் சரளமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். ஆனால் தனது தாய் மொழியான தமிழ் மூலமாக அவரால் மக்களிடம் உரையாட முடியவில்லை என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, அந்த பதிவிற்கு 36 வயதான மிதாலி, தமிழ் எனது தாய் மொழி, என்னால் சரளமாக தமிழ் பேச முடியும், தமிழ்நாட்டில் வாழ்வதால் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இதை எல்லாம் தாண்டி நான் இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

என்னுடைய ஒவ்வொரு இடுகையிலும், நீங்கள் விமர்சனம் செய்து வருகிறீர்கள். தினசரி நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்! என எனக்கு அறிவுரைகள் கூறுகிறீர்கள். அவை தான் எனக்கு ஊக்கம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் மிதாலி சர்வதேச அளவில் தான் கேப்டனாக இருந்து 100வது வெற்றியை ருசித்தார். அதே போல சர்வதேச அளவில் தனது 20ஆம் ஆண்டினை வெற்றிகரமாக முடித்திருந்தார். அது மட்டுமின்றி தனது சர்வதேச டி20 தொடரிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.