
தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்டு கிடந்த நிலையில் ஆற்றின் அடியில் பாண்டியர் காலத்து மண்டபம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேலும் ஆற்றுக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு அனுமதி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி ஆறு வறண்டு கிடந்த பொழுது 13ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் செழிப்பாக வற்றாத நதியாக இருந்த நிலையில் தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கி விடுவதால் கடைமடை பகுதியில் தாமிரபரணி வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. ஆதலால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளும் பொதுமக்களும் தவிக்கின்றனர். வறண்டு கிடந்த நதியில் புதைந்திருக்கும் மண்டபம் வெளியே தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பண்டைய தாமிரபரணி நதிக்கரையின் நாகரீகத்தை கண்டறிய இங்கு அகழ்வாராய்ச்சி செய்வதற்கு தொல்லியல் துறையினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் தாமிரபரணி ஆற்றுக்கடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவேல் செழிய பாண்டியனால் கட்டப்பட்ட அம்மன் கோவிலாகவும் இருக்கலாமென்றும் நம்பப்படுகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமெனில் அகழ்வாராய்ச்சி செய்வது சாத்தியமா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.