ரஃபேல் விமானத்தின் 36 விமானங்களை பெற்று கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்திய விமான படை ஆரம்பிக்கப்பட்டு 87வது வருடம் இன்று (அக்.8) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “பாதுகாப்பு படை வீரர்களின் தைரியம், துணிச்சல், உறுதிப்பாடு ஆகியவை நாட்டு மக்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது” என்றார்.
மேலும், தற்போதைய பிரான்ஸ் நாட்டிற்கான பயணம், இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தி, விரிவுபடுத்தப்படும். இந்தியாவின் மிக பெரிய போர் திறன் வாய்ந்த கூட்டாளியாக பிரான்ஸ் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் எவியேசன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2016ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போர் விமானங்களை பெறுவதற்காக அரசு முறை பயணமாக 3 நாள் பிரான்ஸ் சென்றுள்ளார் ராஜ்நாத் சிங்.
இப்பயணத்தில், பிரான்ஸ் நாடு அதிபரான மேக்ரானை சந்தித்து இரு நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை குறித்து பேசயுள்ளார்.
தற்போது ரஃபேல் விமானத்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி, பிரான்ஸ் நாட்டு பார்டியாக்ஸ் நகரில் நடைபெறுகிறது. பெறப்படும் முதல் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணம் செய்ய உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில், ஊழல் நடந்திருப்பதாகவும், உள்நாட்டு தொழில் வாய்ப்பை நழுவ விட்டதாகவும், இடைத்தரகராக முகேஷ் அம்பானி இணைக்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.