கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் பகிர்ந்திருக்கிறார். கடவுளின் அருளால் தான் உயிர் தப்பியதாக அவர் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இசை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் ஏ.ஆர் ரகுமான். ஆரம்பத்தில் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றி வந்த ஏஆர் ரகுமான் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா என்கிற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை இவரது ரசிகர்கள் இசைப் புயல், ஆஸ்கர் நாயகன் போன்ற பல பெயர்களால் அழைத்து வருகின்றனர். ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற படத்திற்கு இசமைத்ததற்காக இவர் ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார். மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதும் ஏ ஆர் ரகுமானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தந்தையின் இறப்புக்கு பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஏ.ஆர் ரகுமான் தனது தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார்.

தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் பியோனோ, ஹார்மோனியம் மற்றும் கிட்டார் போன்றவற்றை வாசிக்க கற்றுக் கொண்ட ஏ ஆர் ரகுமான், தனது 11 வது வயதில் இளையராஜாவின் இசைக் குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம்எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் உசேன் போன்ற பல இசையமைப்பாளரிடம் பணியாற்றி இருக்கிறார். ரோஜா படத்தின் மூலமாக தனி இசை அமைப்பாளராக உருவெடுத்த அவர் தற்போது இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார. ஏ ஆர் ரகுமானின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவரது மனைவி செரீனா பானு மற்றும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் கடைசி மகன் அமீன். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் பல ஆல்பம் பாடல்களை பாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஒரு நிமிட பாடல் என்கிற பாடலை பாடி ஆல்பமாக வெளியிட்டிருந்தார் அமீன்.

விரைவில் தமிழ் திரையுலகில் பாடகர் ஆகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் பாடி அதை படமாக்குவதற்காக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கேமரா முன்பு நின்று கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக விபத்து நடந்திருக்கிறது.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அமீன், இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நலம் விரும்புகளுக்கும் எனது ஆன்மீக ஆசிரியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பாடலுக்கான படப்பிடிப்பிலிருந்து கேமராவில் நடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை கவனித்துக் கொண்டிருக்கும் குழுவை நான் முழுமையாக நம்பினேன். அந்த இடத்தில் நடுவில் இருந்த போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளக்குகள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. சில நிமிடங்கள் தாமதித்து இருந்தால் அனைத்தும் என் தலையில் விழுந்திருக்கும்.

நானும் என்னுடைய குழுவினரும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு கீழே ஏ ஆர் ரகுமான் நீ இந்த விபத்திலிருந்து தப்பியது அதிசயம் எல்லாம் இறைவன் அருள் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பலரும் அமீனுக்கு விபத்தில் இருந்து தப்பியதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.