
தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டமான காஞ்சிபுரம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இதே போன்று நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும் மேலும் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களும் உருவாக்கப்பட்டது.புதிதாக உதயமாகும் மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள வருவாய் கோட்டங்கள் தாலுகாக்கள் பற்றியும் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், புதிய மாவட்டங்களை நேரில் சென்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி தென்காசி மாவட்டத்தை நவம்பர் 22 ஆம் தேதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 27ஆம் தேதியும், பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை நவம்பர் 28 ஆம் தேதியும், செங்கல்பட்டு மாவட்டத்தை 29 ஆம் தேதியும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார்.